தொழிலாளி அடித்துக்கொலை

வேதாரண்யம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை

Update: 2023-03-06 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணமாக கிடந்த தொழிலாளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம்(வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கரியாப்பட்டினம் சாலைக்கடைத் தெருவில் வெங்கடாஜலம் அடித்துக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கரியாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாஜலத்தை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை

இதற்கிடையே கரியாப்பட்டினம் சாலைக்கடை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(35) என்பவரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சாலைக்கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த ெவங்கடாஜலத்தை குடிபோதையில் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்றதாக போலீசாரிடம், வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

இந்த வழக்கு தொடர்பாக வெங்கடேசை கைது செய்து விசாரணை நடத்தினால், எதற்காக வெங்கடாஜலத்தை அவர் கொலை செய்தார் என்பது தெரிய வரும் என கரியாப்பட்டினம் போலீசார் தெரிவித்தனர்.

வேதாரண்யம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்