கருமேனி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்தது

Update: 2022-11-05 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் கருமேனியாறு செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் முன்பு வெள்ளநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலத்தின் கீழ் இருபுறங்களிலும் காணப்படும் சீமைக்கருவேல மரங்கள், மற்றும் செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சாத்தான்குளம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றம் இணைந்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. நகரப்பஞ்சாயத்து தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் ஏற்பாட்டின் கீழ் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பொக்லைன் எந்திரம் மூலம் கருமேனி ஆற்றின் கரைகளில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களையும் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் சசிகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருமேனி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதற்கு சாத்தான்குளம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்