எம்மதமும் சம்மதம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு - ப.சிதம்பரம்

எம்மதமும் சம்மதம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-10 03:04 GMT

காரைக்குடி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மொழிக்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று பேசுதல். மற்றொன்று புரிதல். சனாதன தர்மம் என்றால் தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் இந்து மதம் என்று நம்பப்படுகிறது. இவ்விஷயத்தில் பேசியது ஒரு பொருளில், புரிந்து கொண்டது மற்றொரு பொருளில். இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலையிட விரும்பவில்லை. எம்மதமும் சம்மதம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு.

ஜி-20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் மாநாட்டினையொட்டி ஜனாதிபதி அளிக்கும் விருந்திற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பில்லை. இது எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத நிகழ்வாகும். ஜனநாயகமே இல்லாத நாட்டிலும், எதிர்க்கட்சிகளே இல்லாத நாட்டிலும் மட்டுமே இது சாத்தியம். வருங்காலத்தில் இந்தியாவிற்கு இந்தநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, அரசியல் சாசனத்தில் அவ்வளவு எளிதாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. மாநில அரசுகளை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையினை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர் என்ற நோக்கத்தில் பயணிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்