கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியுடன் நீலகிரியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

Update: 2023-02-22 18:45 GMT

ஊட்டி

சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியுடன் நீலகிரியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

சாம்பல் புதன்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும் நிகழ்வை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர், உயிர்த்தெழுந்ததாக கூறப்படும் தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய 40 நாட்களும் உபவாசம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதன் தொடக்க நாளான நேற்று சாம்பல் புதன் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அனுசரிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றபட்டு குருத்தோலைகளை எரித்து எடுக்கபட்ட சாம்பலை மந்திரித்து, மனிதனே நீ மன்னாக இருக்கின்றாய் திரும்பவும் மண்ணுக்கே போவாய் என்றும், மனம் திரும்பி நற்செய்தியை அறிவியுங்கள் என்றும் கூறி பாதிரியார்கள் ஆலயத்திற்க்கு வந்த அனைவரின் நெற்றியில் சாம்பலை பூசினர்.

சிறப்பு திருப்பலி

ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டது. இதில் பங்கு தந்தை ஜான் ஜோசப் தனிஸ், உதவி பங்கு தந்தை அபிஷேக் உள்பட பலர் பங்கேற்றனர். தவக்காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மேலும் துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர், உடமைகளை இழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் பங்கு குரு செல்வநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இது தவிர தென்னகத்தின் கல்வாரி என்று அழைக்கபடும் காந்தல் குருசடி திருத்தலத்தில் தவக்கால வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் திரு காயங்களின் சிறப்பு ஆராதனை மற்றும் சிலுவை பாதை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்