தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்கவே கவர்னர் மீது குற்றம்சாட்டுகிறார்கள்தம்பிதுரை எம்.பி. பேட்டி

Update: 2023-07-10 19:00 GMT

பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம், கொத்தப்பள்ளி, சூலாமலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவி மீது தொடர்ந்து புகார்கள் கூறுவதும், அதற்கு கவர்னர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயக நாட்டில் அவரவர்களுக்கென அதிகாரம் உண்டு. அதற்குட்பட்டு அவர்கள் பணிபுரிகிறார்கள். அப்படி அரசியல் செய்தால் தான் நல்லது. புதுச்சேரியில் நாராயணசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இதேபோல் கவர்னர் மீது குறை சொல்லி கொண்டு இருந்தார். அப்போது அங்கு எந்த மக்கள் பணியும் நடக்கவில்லை.

தற்போது தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்கள் பணியில் தோல்வி அடைந்துள்ளது. அதை மறைப்பதற்காக கவர்னர் மீதும், மத்திய அரசு மீதும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கவர்னர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும், அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் பேசுகிறார்கள். அப்படி பார்த்தால் ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவர். அவரிடம் புகார் மனு கொடுப்பது சரியா.

தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்