பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் மும்முரம்

பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் மும்முரம்

Update: 2023-06-04 18:45 GMT

வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

7-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 40 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களில் முளைத்துள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். பள்ளியின் கட்டிடம் மற்றும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியில் ஆசிரியர்கள்

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள், கழிப்பிடம் மற்றும் கட்டிடம் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்தும் பள்ளிகளுக்கும் புத்தகங்கள்-குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி திறந்த அதே நாளில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள்- குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு

இந்த ஆண்டு 4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி 3 நாட்கள் அளிக்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தூய்மை பணிகளை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்