தமிழ் புத்தாண்டு: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Update: 2023-04-13 01:58 GMT

சென்னை,

தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) மற்றும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழக்கமாக தினந்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழ் வருட பிறப்புக்கு 300 பேருந்துகளும் ரம்ஜான் பண்டிகைக்கு 200 பேருந்துகளும் என்று மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்