ஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.

Update: 2024-09-01 03:56 GMT

குமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

அதன்படி ஞாயிறு விடுமுறையான இன்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்றவற்றில் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிகிறது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடற்கரையில் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்