எடப்பாடி பழனிசாமி இல்லம் முன் திடீர் பரபரப்பு...! அணி அணியாக திரண்டு வந்து ஆதரவு...!

இன்று 8 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-21 06:18 GMT

சென்னை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி நிர்வாகிகள் நடையாய் நடந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்கள். ஒற்றை தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில் தனது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் நேராக ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எம்.பாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதனால் சமாதானம் செய்ய வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றனர். இதனால் வழக்கம்போல நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையை எழுப்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வியூகம் வகுத்து வருகிறார்கள். இதை முறியடிக்க ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறார்.

நேற்று 7வது நாளாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி எடப்பாடி தரப்பு காவல் நிலையத்தை நாடியுள்ளது.இதனால் அதிமுக பொதுக் குழு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோகுல இந்திரா ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;-

கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவரை பின்தொடர முடிவு செய்துள்ளோம். எந்த இடத்திலும் எதிர் அலை இல்லாத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருகிரோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணிவகுக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார். அறிவித்தபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம் .

இன்று 8 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அவர் தனது வீட்டில் இருந்தபடி மூத்த தலைவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வி.ல் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். புதுச்சேரி கிழக்கு மாநில மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொது.செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் வீரமணி கூறும்போது:-

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பார்க்க தி.மு.க. நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது ஒரு போதும் நடக்காது. ..

ஒற்றை தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. கழக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வழங்குவார். ஓ.பன்னீர் செல்வம் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் ஒரே தலைவர். 99 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வர வேண்டுமென, திருப்பூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம்,கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், 35 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம், பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: கட்சியின் நலன் கருதி இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக, ஒற்றை தலைமை என்ற முடிவை திருப்பூர் மாநகர்மாவட்ட கழகம் எடுத்துள்ளது.

35 பொதுக்குழு உறுப்பினர்களும் 100 சதவீதம் ஒருமனதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டுமென, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு நிலைப்பாடு எடுத்து இருந்த நெல்லை மாவட்ட செயலாலர் தச்சை கணேச ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் எடப்பாடியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தனக்கு பெருகி வரும் ஆதரவை கருத்தில் கொண்டு, செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமைகுறித்த தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் வகையில், தீர்மானத்தின் ஷரத்துகளை தயாரிக்கதீர்மானக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று பழனிசாமி ஆதரவாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்