பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்

நரிக்குடி ஒன்றியத்தில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரேஸ்வரன் கூறினார்.

Update: 2023-05-18 19:16 GMT

காரியாபட்டி,

நரிக்குடி ஒன்றியத்தில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரேஸ்வரன் கூறினார்.

விவசாயிகளுக்கு மானியம்

நரிக்குடி ஒன்றியத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளானேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

ஆழ்துளைக்கிணறு

மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் எந்திரம் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டையும் அமைத்து தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கிணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

ஆகவே நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரேஸ்வரன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்