ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-05 18:45 GMT

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், தங்கதுரை, மாரப்பன், பாஸ்கரன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில், எதிர்கால இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற அரசு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்