கிருஷ்ணகிரியில்ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Update: 2023-07-18 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பவுன், வெங்கடேசன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன், மண்டல தலைவர் ஸ்ரீனிவாசலு மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ரவிச்சந்திரன், தில்லையப்பன், முனியன், ராணிகலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாயை சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும்.

பென்சன் திட்டம்

மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு செய்து தொகை வழங்காமல் உள்ளவற்றை விரைவாக வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்