முகத்தில் மிளகாய் பொடி தூவிபெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர் .
மதுரை அவனியாபுரம் சந்தோசம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராபின்சன் அருள்ராஜ். பால் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஞானசுதன்சிலி(வயது 38). இவர் வீட்டின் ஒரு பகுதியில் ஸ்டேசனரி ஸ்டோர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஞானசுதன்சிலி மட்டும் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு ஒருவர் பொருள் வாங்க வந்தார். திடீரென்று அவர் ஞானசுதன்சிலி முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார். இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி சங்கிலி பறித்தவரை தேடி வருகிறார்கள்.