பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை வீசுவதால் ராமேசுவரம் கடலுக்கு வரும் ஆபத்துகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதி கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கபுரி ஆகும்.

Update: 2022-10-12 17:15 GMT

ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதி கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கபுரி ஆகும்.

கிட்டத்தட்ட 450 வகையான பல்வேறு மீன் இனங்கள், 104 வகையான பவளப் பாறைகள், 144 வகையான கடல்பாசிகள், 260 வகை மெல்லினங்கள் மற்றும் கடல் பசு, கடல் குதிரை, டால்பின்கள் என மொத்தம் 3,600 வகையான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பொக்கிஷமாக மன்னார் வளைகுடா கடல் பகுதி கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிவது உலகம் முழுவதையும் யோசிக்க வைத்திருக்கிறது.

கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கிய ஆபத்தாக கழிவுநீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் உருமாறி உள்ளன. கடலில் பிளாஸ்டிக் சேர்ந்து கொண்டே இருப்பது, எதில் சென்று முடியும் என தெரியவில்லை. மக்களுக்கும் இதில் விழிப்புணர்வு இல்லை.

பிரிக்க முடியாதது

இந்த அலட்சியம் மனிதன் உள்பட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஆபத்தாக மாறி வருகிறது. அதில் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

ராமேசுவரம் பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக கடல் பகுதியை சுற்றி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் கடல் நீரில் சூழ்ந்து கிடக்கின்றன.

தீவுகள்

இந்த துறைமுகம் அருகில் தான் குருசடை மற்றும் சிங்கிலி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றி அதிக அளவில் டால்பின்கள், ஆமை மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் அரிய வகை பவளப்பாறை உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளன.

குந்துகால் துறைமுக கடல் பகுதியை சூழ்ந்துள்ள இந்த பாலித்தீன் பைகள் கடல் அலை, காற்று மற்றும் நீரோட்ட வேகத்தால் தீவின் அருகே உள்ள கடல் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.

கடலில் மிதந்து வரும் பாலித்தீன் பைகளை ஆமை, டால்பின், கடல் பசுக்கள்,சிறிய வகை உயிரினங்கள் பாசிகள் b

இதுபற்றி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:- மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து வகை உயிரினங்களுக்கும் மிகப்பெரிய எதிரி என்றால் அது பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள்தான்.

அதிலும் குறிப்பாக கடற்கரையோரம் மற்றும் கடலில் வீசப்படும் இந்த பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாலித்தீன் பைகள் தெரியாமல் கடலில் உள்ள ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட உயிரினங்கள் ஏதேனும் சிறிய வகை மீன்கள் என நினைத்து சாப்பிடும் பட்சத்தில் அந்த பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள பாலித்தீன் மற்றும் ரசாயன பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை கொடுக்கின்றன.

நாளுக்குநாள் கடலோர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதை பார்க்கும்போது இன்னும் 20 ஆண்டுகளில் கடலில் மீன்கள் இனங்களை விட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக வந்து விடுமோ? என்ற ஒரு அச்சம் தான் இருந்து வருகிறது. மனித இனத்தை மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பாலித்தீன் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தண்ணீர் பாட்டில்கள்

அதுபோல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும் பார்சல்கள் அடங்கிய பாலித்தீன் பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் சர்வ சாதாரணமாக கடலில் வீசி விடுகின்றனர்.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் கடற்கரையோரம் மற்றும் கடலிலும் வீசிவிட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பயன்பாடு என்பது மிக அதிகமாக இருந்து வருகிறது. இதை முழுமையாக தடுத்து நிறுத்தி கண்காணிக்க வேண்டிய வனத்துறையினரும் முழுமையாக இந்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது இல்லை.

சோதனை

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பாம்பன் ரோடு பாலத்திற்கு முன்னதாகவே அனைத்து சுற்றுலா வாகனங்களையும் நிறுத்தி முழுமையாக சோதனை செய்து தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து அதன் பின்னர் ராமேசுவரத்திற்குள் அனைத்து வாகனங்களை அனுப்ப வேண்டும். அதுபோல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே முன்வந்து பயன் படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்தமாக எல்லா வகை கடல் உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்