அரசு விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை

அரசு விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-14 18:45 GMT


அரசு விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகள் 33 மாணவர்களுக்கானது, 22 மாணவிகளுக்கானது, கல்லூரி விடுதிகள் 4 மாணவர்களுக்கானது, 6 மாணவிகளுக்கானது, பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விடுதிகளில் எவ்விதசெலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்

இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு வரும் 21-ந்தேதிக்குள், கல்லூரி விடுதிகளுக்கு அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

விடுதிகளில் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் உள்ளன.

மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களும் இந்த விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள். மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்