சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-06 18:45 GMT

கயத்தாறு:

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு, அங்கன்வாடி வட்டாரச் செயலாளர் ராமலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ஜெகவீரபாண்டியன், வட்டார நிர்வாகிகள் ரீட்டாள், வேலுச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு டி.ஏ.வுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிரந்தர காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார்மயமாக்குவதை தவிர்த்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் தமிழக அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்