சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:-விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனுவை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனுவை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-06-15 21:03 GMT


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த வழக்கை விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டில், மாவட்ட கோர்ட்டு அவகாசம் பெற்று இருந்தது. இந்த அவகாசத்தை மேலும் சில மாதங்கள் நீட்டித்து உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, எங்கள் தரப்பில் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க வேண்டியதுள்ளது என தெரிவித்தார்.

இதற்கிடையே போலீசார் தாக்கியதில் இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் ஆஜரான வக்கீல், தற்போது தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் நீதிபதி நியமிக்க உள்ளனர் என தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்