சேலத்தில் ரூ.25 கோடிக்கு மது விற்பனை

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Update: 2022-10-25 20:28 GMT

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

மதுபிரியர்களின் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் 200-க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய திருவிழாக்காலங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைக்கட்டியது. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் திரண்டு வந்து, தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி அருந்தினர். குறிப்பாக பீர் அதிகமாக விற்பனையானது. மாநகரில் சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மதுவாங்குவதற்காக மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

ரூ.25 கோடிக்கு மதுவிற்பனை

இதையடுத்து மதுபிரியர்கள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றதை காணமுடிந்தது. மதுக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. சில கடைகளில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவகைகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனால் 3 நாட்களில் மட்டும் ரூ.25 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. குறிப்பாக நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையன்று ரூ.9 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்