பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

சங்கராபுரம் அருகே பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-20 19:58 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 51). மூரார்பாளையத்தில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ஜோதிடம் பார்க்க திருச்சி சென்றார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதில் வெற்றிவேல் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் அங்கிருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்