நலிந்தோர், விதவைகள் உதவித்தொகை வழங்க வேண்டும்

நலிந்தோர், விதவைகள் உதவித்தொகை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-03-07 18:45 GMT

தொண்டி, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குருசாமி தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நலிந்தோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் அரசின் சார்பில் மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. சமீப காலமாக ஓய்வூதிய தொகை பெற்று வந்தவர்களுக்கு திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உதவித்தொகை கிடைக்காதவர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அனைத்து தகுதியும் உள்ளவர்களுக்கு பல மாதங்கள் ஆகியும் உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தாலுகா அலுவலகங்களுக்கு தினமும் வந்து உதவித்தொகை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அரசிடமிருந்து நிதி வரவில்லை என காரணம் கூறுகின்றனர். எனவே தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த தாலுகாவை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவித்தொகை கிடைத்திட உரிய வழிவகைகள் செய்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்