சென்னையில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கோவில் சொத்துகள் மீட்பு

சென்னை மண்டலத்திற்குட்பட்ட கோவில்களின் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டது.

Update: 2022-09-16 04:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மண்டலத்திற்குட்பட்ட கோவில்களின் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டது.

அதன்படி, சென்னை, கொத்தவால்சாவடி, ஆதிகேசவ பாஷ்யகார கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி கட்டிடம் (சந்தை மதிப்பு ரூ.4 கோடி), வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்து, வில்லிவாக்கம் ராஜா தெரு, ஆதி நாயுடு தெரு, மேற்கு மாடவீதி மற்றும் ரெட்டிதெருவில் 24 கடைகள் (சந்தை மதிப்பு ரூ.16 கோடி). மேற்கண்ட கோவில்களின் சொத்துக்களுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததால் அந்த சொத்துக்கள் மீட்கப்பட்டது.

இச்சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும். இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம். பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன், ஆய்வாளர்கள் சம்பத், அறிவழகன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்