தனியார் பஸ்கள் மோதல்; 5 பேர் படுகாயம்

தனியார் பஸ்கள் மோதல்; 5 பேர் படுகாயம்

Update: 2023-06-02 18:45 GMT

திருவாரூர் அருகே தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பஸ்கள் மோதல்

நாகை மாவட்டம் தேவூர் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் காலை வந்து கொண்டிருந்தது. அதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல் தனியார் மினிபஸ் ஒன்று திருவாரூரை நோக்கி ஏராளமான பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

நாகை-தஞ்சை பைபாஸ் சாலையில் அடியக்கமங்கலம் அருகே பஸ்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது புதுகாலனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ்சை தனியார் பஸ் டிரைவர் நிறுத்தினார். அந்த நேரத்தில் பின்னால் வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக தனியாா் பஸ் மீது மோதியது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் 2 பஸ்களும் சேதம் அடைந்தன. மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ்கள் மோதி 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்