பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி மர்ம சாவு

சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-03-04 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களுடைய மகள் மாரியம்மாள் (45). இவர் குருவிகுளம் யூனியனில் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காலை மாரியம்மாளின் வீடு பூட்டி கிடந்ததால், அக்கம்பக்கத்தினர் அவரது தாய் சண்முகத்தாய்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மாரியம்மாளை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சங்கரன்கோவிலை அடுத்த இலவன்குளம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே காட்டுப்பகுதியில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் காணாமல் போனதாக தேடப்பட்ட மாரியம்மாள் என்பது தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறிது தொலைவில் நின்றது.

இதையடுத்து போலீசார், மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.

இதற்கிடையே, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்