தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-30 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர வாகனங் களுடன் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர். மண்டல தலைவர் பேர்சில் தலைமையில் தங்களது வாகனங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன், செண்பகவல்லி, சிவசேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் தாசில்தார் சுசிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தவர்கள் மனுக்கள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்