பாமக மட்டும் தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது - அன்புமணி ராமதாஸ்

அதிமுகவும், திமுகவும் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-08-20 12:12 GMT

தருமபுரி,

தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான நேற்று ஒகேனக்கல்லில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதனையடுத்து 2 வது நாளாக இன்று குரும்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டார். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், வாழ்வாதாரம் இல்லாமல், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் தேடி செல்கின்றனர். எனவே சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் எனவும் என கேட்டுக் கொண்டார்.

அதிமுகவுக்கும் திமுகவிற்கும் காவிரி உபரிநீர் திட்டம் குறித்து கவலையில்லை. அதிமுகவும், திமுகவும் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆனால், பாமக மட்டும் தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது. ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பற்றி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியாது. இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும் என பாமக தான் முதன் முதலில் வலியுறுத்தியது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,

கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட வாக்குக்கான இலவசங்கள் வேண்டாம். கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாய பொருள்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான இலவசம் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பாமக கூரி வருகிறது. இலவசங்களால் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஆறு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனுக்காக மட்டும் தமிழகம் 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்