உடல் உறுப்புகள் திருட்டு: கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகளை எடுத்து கடத்தி விற்ற வழக்கில் சபித் நாசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-28 04:28 GMT

கோவை,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(வயது 42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி, அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவர்களது சிறுநீரகங்கள், கல்லீரலை எடுத்து கடத்தி விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது.

அதன் பேரில் திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சபித் நாசரை கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எடப்பள்ளி பகுதியை சேர்ந்த சஜித் சாபு (30) என்பவருக்கும் உடல் உறுப்புகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், கும்பலின் வரவு, செலவு கணக்குகளை கவனித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சபித் நாசரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அங்கமாலி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பின்னர் ரகசிய இடத்தில் வைத்து சபித் நாசரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் ஊரக போலீஸ் சூப்பிரண்டு வைபவ் சாக்சனா தலைமையில் 10 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தமிழ்நாட்டில் கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உறுப்புகளை கொடுத்தவர்கள் அல்லது இழந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பெங்களூரு, ஐதராபாத்தில் விசாரணை நடத்த கேரள போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்