தனக்கு பதவி கிடைக்காதபோது ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்குவார் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தனக்கு பதவி கிடைக்காதபோதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் யுத்தம் நடத்த தொடங்கிவிடுவார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Update: 2022-08-21 09:27 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனக்கு பதவி கிடைக்காதபோதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் யுத்தம் நடத்த தொடங்கிவிடுவார் என்று விமர்சித்தார். மேலும் பன்னீர்செல்வம் நடத்துவது தர்மயுத்தம் இல்லையென்றும் அவரது துரோக யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளன என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

"அண்ணன் ஓபிஎஸ், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுவரை 7 முறை தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். எப்போதெல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ, அப்போதெல்லாம் அவர் ஒரு மவுன யுத்தத்தை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்லுவார். ஆனால் நான் சொல்கிறேன் அது தர்மயுத்தம் இல்லை, துரோக யுத்தம்.

அவர் அதிமுகவுக்கு துரோகம் செய்த காரணத்தினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு அவர் ஆளாகியிருக்கிறார். எப்போதெல்லாம் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கட்சிக்கு ஆபத்து என்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவார். அதற்காக அவர் போராடுவார். அதற்காக அவர் பல தர்மயுத்தங்களை நடத்துவார். அந்த யுத்தங்கள் எல்லாம் அவருக்கு தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன தவிர அவருக்கு வெற்றியைத் தராது." இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்