நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம், சீமான் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம், சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-24 09:45 GMT

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை P.சுப்ரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தமது தந்தையை இழந்து தவிக்கும் அஜித்குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அன்புச்சகோதரர் அஜித்குமாரின் தந்தையார் சுப்ரமணியம் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

அன்புத் தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன். சுப்ரமணியம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்