திட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை - மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

திட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.

Update: 2023-04-10 21:09 GMT

திருப்பரங்குன்றம்

திட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.

மண்டல குழு கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சையது முஸ்தபா கமால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் ரவிச்சந்திரன் : துப்புரவு பணிகள் தொய்வாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் கருப்பசாமி: வார்டு பற்றியோ, வார்டில் உள்ள தெருக்களை பற்றியோ தெரியாதவருக்கு துப்புரவு பணி செய்வதற்காக பணம் போகிறது. 10 சதவீதம் கூட தெருக்களில் தூய்மை பணி நடக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் 80 சதவீதம் பேர் விடுமுறையில் சென்று விடுகிறார்கள். திங்கட்கிழமை குப்பைகள் குவிகிறது. குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

எந்தவொரு பணியும் நடக்கவில்லை

கவுன்சிலர் ஸ்வேதா: 15 நாள் ஆனாலும் தெருக்களில் குப்பை அள்ளுவதில்லை. திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த பணிசெய்ய வேண்டும் என்று கூறினாலும் அதை செய்வதில்லை.

சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

கவுன்சிலர் இந்திராகாந்தி: எனது வார்டில் ஒரு திட்டப்பணி கூட நடக்கவில்லை. சில தெருக்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் தெருவிளக்குகள் எரியவில்லை. வார்டுக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினீர்கள். அதற்கான பணிகள் நடக்கவில்லை.

மற்ற 4 மண்டலங்களில் ரூ.3 லட்சத்திற்கான பணிகள் நடந்ததாக கூறி பாராட்டு தெரிவிப்பதாக தெரிவிக்கின்றனர். 10 கிலோ சுண்ணாம்பு அடித்து விட்டு ரூ.62 ஆயிரம் பில் வாங்குகிறார்கள். இது என்ன? கணக்கு என்று தெரியவில்லை. இந்த மண்டலத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை.

நடவடிக்ைக

கவுன்சிலர் உசிலை சிவா: எனது வார்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3 லட்சம் வேலை நடந்துள்ளது. அதற்காக மண்டல தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கவுன்சிலர் சுதன்: 13 மாதங்கள் ஆகியும் வார்டில் ஒரு வேலை கூட நடக்கவில்லை. முதல் வேலையாய் ஆழ்துளை கிணறு போட தயாரான போதிலும் அந்த வேலையை இரண்டு மாதமாகியும் நடக்கவில்லை.

உதவி ஆணையர்: பணிகள் நடக்கும்.

இதைதொடர்ந்து கூட்டத்தில் தொடர்ந்து கவுன்சிலர்கள் ரவி, சிவசக்தி, காவேரி ஆகியோர் பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்