'நீட்'தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி..?

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ‘நீட்’ தேர்வு முடிவுகள், மையங்கள் வாரியாக நேற்று வெளியிடப்பட்டன.

Update: 2024-07-20 21:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

எம் பி பி எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை என்று அழைக்கப்படும் என்.டி.ஏ. நடத்துகிறது. அதன்படி, 2024, 25-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.

நாடு முழுவதும் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வெளியானது. தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேரில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்று தகுதி அடைந்திருந்தனர்.

மேலும் இந்த தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், 1,563 மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதுதவிர வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதோடு பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் இதுதொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், 'நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, மாணவர்களின் பெயரை மறைத்து 'டம்மி' வரிசை எண்ணை பயன்படுத்தி வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

ஒரு மாணவர் தன்னுடைய மதிப்பெண் மட்டுமல்லாது, மற்றவர்களும் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும், ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா? என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் தேர்வு முடிவுகளை அப்படி வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று பிற்பகலில் மீண்டும் வெளியிட்டது.

அதன்படி, 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவருடைய மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எவ்வளவு பேர்?

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட்டப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 449 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து, அவர்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வை எழுதியதாகவும், அவர்களில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நகரங்கள், தேர்வு மையங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்டிருந்த புள்ளி விவரங்களின்படி, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 664 பேரின் மதிப்பெண் பட்டியல் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட சில நகரங்களில் தேர்வு எழுதியவர்கள் 700-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். 31 நகரங்களில் தேர்வு எழுதியவர்களில் பரவலாக 500 மற்றும் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக, இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், சில மாணவர்கள் "மைனஸ்'' மதிப்பெண்ணையும் எடுத்திருந்தனர். உதாரணமாக ஒரு மாணவர், -28 மதிப்பெண் எடுத்திருந்ததும் நேற்று வெளியான மதிப்பெண் பட்டியலில் தெரியவந்தது.

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசம் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது, 'சில வெளிமாநில தேர்வர்கள் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களில் எழுதியிருக்கலாம். அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் 50 அல்லது 100 எண்ணிக்கையில் தான் வித்தியாசம் வரும். ஆனால் 700-க்கு மேல் வருவது குளறுபடியை தான் காட்டுகிறது. கல்வியில் வெளிப்படைத்தன்மை அவசியம். சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்