பெரியகுளம் அருகேசாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

பெரியகுளம் அருகே, சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

Update: 2023-10-02 18:45 GMT

கல்லூரி மாணவர்கள்

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. அவருடைய மகன் அஸ்வின் (வயது 19). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் யுவராஜா (19). இவர்கள் 2 பேரும், பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள், நேற்று காலை வடுகப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்றனர். பின்னர் இவர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வடுகப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஸ்வின் ஓட்டினார். யுவராஜா பின்னால் அமர்ந்திருந்தார்.

சாக்கடை கால்வாய்க்குள்பாய்ந்தது

தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றது. பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டி அருகே சேடப்பட்டி பகுதியில் காளியம்மன் கோவில் அருகே உள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை அஸ்வின் திருப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மைல்கல்லின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள், அருகே உள்ள பாலத்தில் மோதி சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த 2 பேரும், கால்வாயில் இருந்து எழுந்திருக்க முடியாமல் அங்கேயே கிடந்தனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள், சாக்கடை கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் பரிதாப சாவு

இதுகுறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கால்வாயில் கிடந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

ஆனால் அவர்கள் சாக்கடை கால்வாய்க்குள்ளேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்