நல்லம்மா காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

நந்திமங்கலத்தில் உள்ள நல்லம்மா காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-03 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே நந்திமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லம்மா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் அதே ஊரைச் சேர்ந்த பூசாரி மணிவண்ணன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் ,குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த வெள்ளி கவசம், 4 கிராம் தங்க கண் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் அளித்த புகாரி்ன் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்