கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயம்

விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயமாகினர்.

Update: 2023-02-04 18:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயமாகினர்.

இளம்பெண் மாயம்

திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வருபவர் சக்திஅய்யனார். இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது 23). இவர்களுக்கு விஷ்வா (3), ரேணுகா (1) ஆகிய 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் பாண்டீஸ்வரிக்கும், சக்தி அய்யனாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு சக்தி அய்யனார் குடித்துவிட்டு வந்து பாண்டீஸ்வரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பாண்டீஸ்வரி தனது குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். அடுத்த நாள் காலையில் பாண்டீஸ்வரியின் தாய் வீரசெல்வி தனது மகளை பார்க்க சென்றபோது அங்கு அவரும், குழந்தைகளும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரசெல்வி இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ்காரர்

விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கற்குவேலாயி. இவரது கணவர் விவேக்(30). விருதுநகர் ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்கள் காதலித்து பெற்றோர்களின் விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் போலீஸ்காரர் விவேக் சில பெண்களுடன் செல்போனில் பேசி வந்ததை அறிந்த கற்குவேலாயி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடமும் அவர் தெரிவித்தாராம்.

இதையடுத்து கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற விவேக் வேலைக்கு செல்லாதநிலையில் வீட்டிற்கும் வரவில்லை. இதுபற்றி கற்குவேலாயி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட மாணவி மாயம்

விருதுநகரை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆசிரியர் திருமணத்திற்கு அன்பளிப்பு வாங்குவதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டார். அதற்கு பெற்றோர் தர மறுத்ததால் ஆசிரியர் திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றிய புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்குறிச்சியில் தனது தோழி வீட்டில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மீண்டும் மாயமாகிவிட்டார். இதுபற்றி அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன்

விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் மலர்கொடி. இவரது 12 வயது மகன் இந்நகர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமாகி விட்டான்.

இது பற்றி மலர்கொடி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்