காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலி

காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் குளிக்க சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-09 09:56 GMT

மெக்கானிக்

சின்ன காஞ்சீபுரம், விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசமர தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சூர்யா (20). ஏசி மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்கச் சென்றார். கடந்த சில தினங்களாக காஞ்சீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது.

குட்டையில் மூழ்கி பலி

இந்த நிலையில் நண்பர்கள் குளிக்கும்போது சூர்யா கரையில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து சூர்யா காணவில்லை. அவரது உடைகள் மட்டும் கரையில் இருந்தது. அவருடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் குளிப்பதற்காக சூர்யா தண்ணீரில் இறங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சுமார் 1 மணி நேரம் தேடியும் சூர்யா கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே இதுகுறித்து நண்பர்கள் மாகறல் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்த நிலையில் சூர்யா உடலை பிணமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து மாகறல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவுடன் குளிக்கச் சென்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்