மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனி

மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனி

Update: 2022-09-08 19:35 GMT

திருக்காட்டுப்பள்ளி,

பூண்டி மாதா பேராலயத்தில் நடந்த மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனியை பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைத்தார்.

பூண்டி மாதா பேராலயம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய‌ சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு திருப்பலி

மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற‌ தலைப்பில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலய‌அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்டமுதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்ட முதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலய‌ உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

திருப்பலி நிறைவையொட்டி மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனியின் போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை மனமுருகி வழிபட்டனர். விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) மரியாள் -தாய்மையின் தலைப்பேறு ‌என்ற‌ தலைப்பில் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா ‌பெருவிழா நிறைவு பெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்