அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் என பெயரிடக்கோரிய வழக்கு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் என பெயரிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-17 20:05 GMT


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

அரசு அலுவலகங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அரசு திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 1970-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் இந்த பதவியை அறிமுகம் செய்தார். இந்த அதிகாரிகளை பி.ஆர்.ஓ. என்று அழைக்கின்றனர். தற்போது தனியார் நிறுவனங்களில் இதுபோன்று மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மக்கள் தொடர்பு அதிகாரிக்கும், தனியார் மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் வேறுபாடுகள் இல்லாமல் ஒரு குழப்ப நிலை உருவாகிறது. மேலும் அரசு டாக்டர்கள், அரசு வக்கீல்கள் பணிகளில் வேறுபடுத்தப்பட்டு காண்பிக்கப்படுகிறது. ஆனால் மக்களுக்கு அரசு திட்டங்களை எடுத்துச்செல்லும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை, அரசு மக்கள் தொடர்பு அதிகாரி என்று பெயரிட்டு அழைப்பதுதான் சரியாக இருக்கும்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகளை, அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் என்ற பெயரிட்டு அழைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் பொதுநலன் என்று எதுவும் இல்லை என்பதால், இதை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்