இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமி... பெற்றோருடன் செல்ல மறுப்பு

மற்றொரு சம்பவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், இன்ஸ்டாகிராம் காதலனை திருமணம் செய்துகொண்டார்.

Update: 2024-06-19 00:27 GMT

சேலம்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த தோழிகளான 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெண் ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்மார்ட் போன்களில் 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும்போது, இரு வாலிபர்களுடன் தனித்தனியாக பழக்கம் ஏற்பட்டது. இதில் 17 வயது சிறுமிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த செல்வா (வயது 24) என்பவருக்கும், 19 வயது இளம்பெண்ணுடன் சேலம் குப்பனூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் மூர்த்தி (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில், 2 தோழிகளும் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், கோவையில் காதலர்களுடன் இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது சிறுமியும், இளம்பெண்ணும் பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன், காதலர்களுடன் செல்ல விரும்புவதாக கூறினர். 19 வயது இளம்பெண் தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அவரது குடும்பத்தினருடன் சென்றார்.

ஆனால் 17 வயது சிறுமி மைனர் என்பதால் பெற்றோருடன் தான் செல்ல வேண்டும் என போலீசார் எடுத்துக்கூறியும் அந்த சிறுமி மறுத்ததால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலத்தில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்