மணிப்பூர் முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மணிப்பூர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்க கோரி அம்மாநில முதல்-மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-08-01 07:48 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிட கோரி மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர், தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் அவர்கள், இந்த இக்கட்டான நேரத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் மேலும் இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரண பொருட்களை விரைவாக அனுப்ப இயலும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்