சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
செஞ்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது
விழுப்புரம்
சிறுமி பலாத்காரம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 49), தொழிலாளி. கடந்த 3.9.2021 அன்று 8 வயது சிறுமியை குமார் அவரது வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம், நடந்தவற்றை கூறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
அதன்பேரில் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மேஸ், குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.