குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2023-05-02 08:51 GMT

தேரோட்டம்

சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவக்கிரக ராகு ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. பிரமோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் பங்கேற்பு

கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் நேற்று காலை வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். குன்றத்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தத்தேர், பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகளின் வழியாக சென்றது. இறுதியாக கோவில் முன்பு தேர் நிறுத்தப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஆங்காங்கே குளிர்பானங்கள், மோர் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

3 ஆண்டுகளுக்குப்பிறகு

கடந்த 2019-ம் ஆண்டு இந்தக் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்