கதர் துணிகள் சிறப்பு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி தொடங்கி வைத்தார்

Update: 2022-10-02 18:45 GMT

விழுப்புரம்

கதர் துணிகள் சிறப்பு விற்பனை

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி கலந்துகொண்டு காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சிறப்பு தள்ளுபடி

அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரம் முழுமையாக எய்தப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை எய்த வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன், கதர் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்