காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

Update: 2023-06-16 09:09 GMT

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 2023-ஐ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுரவு மைய கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்ததாவது:-

கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை, 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

மண்டல குழுக்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புபணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையை சார்ந்த அலுவலர்களை கொண்ட 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை கலெக்டர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதை தெரிவித்தார்கள்.

மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட 11 துறை சார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பள்ளிகள், கல்லூரிகள்

மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அவசர தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் போன்றவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்று சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிவாரண முகாம்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, முகாம்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதிகள், வேட்டி மற்றும் சேலைகள், பாய், தலையணை, பெட்ஷிட், மளிகை பொருட்கள் இருப்பு, உணவு சமைப்பதற்கான இடம், சமையலர், சிலிண்டர் மற்றும் எரிவாயு பொருட்கள், மெழுகு வர்த்தி, டார்ச் லைட், ஜெனரேட்டர்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்