பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு சிறை-ஸ்ரீரங்கம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்ரீரங்கம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-07-12 19:00 GMT

திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி அம்சவள்ளி (வயது 50). இவர் பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்று படுகையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அம்சவள்ளியை கீழே தள்ளி அவரது கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து அம்சவள்ளி அளித்த புகாரின் பேரில் பேட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கொம்பு அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்த சூர்யாவை (25) கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திருச்சி ஸ்ரீரங்கம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்ணிடம் நகையை பறித்த சூர்யாவுக்கு 18 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சூர்யாவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்