நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு போலீஸ் வேலை மறுத்தது சரியல்ல: "பொதுவான காரணத்திற்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு"- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு போலீஸ் வேலையை நிராகரித்தது சரியல்ல என்றும், பொதுவான காரணத்திற்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-11 20:14 GMT


நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு போலீஸ் வேலையை நிராகரித்தது சரியல்ல என்றும், பொதுவான காரணத்திற்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போலீஸ் பணி

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருண்காந்த், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பி.காம் பட்டப்படிப்பை 2018-ம் ஆண்டில் முடித்தேன். கடந்த ஆண்டு காவல்துறையில் 2-ம் நிலை போலீஸ்காரர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் 75-க்கு 65 மதிப்பெண்ணும், உடல் தகுதித்தேர்வில் 24-க்கு 24 மதிப்பெண்ணும் பெற்றேன். இதற்கிடையே என் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, என்னை போலீஸ்காரர் பணிக்கு தேர்வு செய்வதில் இருந்து நிராகரித்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து எனக்கு போலீஸ் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.கருணாநிதி ஆஜராகி, மனுதாரர் கல்லூரி மாணவராக இருந்தபோது 2017-ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சக மாணவர்களுடன் பங்கேற்று உள்ளார். அதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதை காரணமாக வைத்து மனுதாரருக்கு போலீஸ் வேலை மறுக்கப்பட்டு உள்ளது, என்றார்.

கட்டாயப்படுத்த முடியாது

பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் கூட, அவருடைய தகுதியை பரிசீலிக்கும் உரிமை அதிகாரிகளுக்கு உள்ளது. அவருக்கு வேலை வழங்க கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஒருவர் மீதான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டால், அந்த உத்தரவை அவருக்கு ஆதரவானதாக கருதி, வேலை வழங்க பரிசீலிக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சக மாணவர்களுடன் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். பல மாணவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதை தனி நீதிபதி விசாரித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாமல், மனுதாரருடன் போராடிய அனைவரும் விடுவிக்கப்படுவதாக 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டார். இது அருண்காந்துக்கும் பொருந்தும்.

நியமன ஆணை

பொதுவான காரணத்திற்காக போராடுவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை கருத்தில் கொள்ளாமல் மனுதாரரை போலீஸ் பணிக்கு பரிசீலிப்பதில் இருந்து நிராகரித்தது சரியல்ல. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரருக்கு 2-ம் நிலை போலீஸ்காரர் பணி நியமன ஆணையை வழங்கி, பயிற்சிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 12 வாரத்திற்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்