சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதமா?

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

Update: 2023-06-04 18:30 GMT

சமையல் கியாஸ் சிலிண்டர்

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது.

பொதுமக்கள் தவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில இடங்களில் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தன. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது:-

விலை உயர்வு

அரியலூரை சேர்ந்த மணிமொழி:- அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் பாரத் மற்றும் இண்டேன் கியாஸ் சிலிண்டர்களையே பயன்படுத்தி வருகிறோம். கியாஸ் சிலிண்டர் தீர்ந்தவுடன் முன்பதிவு செய்தவுடன் ஓரிரு நாட்களிலேயே கியாஸ் சிலிண்டர் கிடைத்து விடுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும். சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்தால் பொதுமக்கள் மீண்டும் விறகு அடுப்பை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தாமதம்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த மீனாட்சி:- கொரோனா காலங்களில் சமையல் சிலிண்டர் தாமதம் இன்றி கிடைத்தது. ஆனால் தற்போது முன்பதிவு செய்தாலும் உடனடியாக சமையல் சிலிண்டர் கிடைப்பது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலிண்டர் விலை ரூ.500-க்கு கீழே இருந்தது. தற்போது ஒரு சமையல் சிலிண்டரின் விலை ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஊழியர்கள் ரூ.50 சேர்த்து வாங்கி செல்கின்றனர்.

சிரமம் இல்லை

தா.பழூரை சேர்ந்த சுதா:- தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் எந்தவித சிரமமும் இல்லை. காலையில் சிலிண்டர் பதிவு செய்தால் மாலைக்குள் வீட்டிற்கு வந்து விடுகிறது. தவறினால் மறுநாள் காலையில் கிடைத்து விடுகிறது. 2 சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்று உள்ளவர்களுக்கு சிலிண்டர் பதிவு செய்து உடனடியாக கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமம் அடைவார்கள். எனவே தற்போது உள்ள சூழ்நிலை தொடர்ந்தாலே சிலிண்டர் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

தட்டுப்பாடு இல்லை

எண்ணெய் நிறுவன அதிகாரிகள்:- ஆயுட்காலம் நிறைவடைந்த பழைய சிலிண்டர்களை கண்டுப்பிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி கடந்த 2 மாதங்களாக நடந்தது. கியாஸ் கசிவு இல்லாத சிலிண்டர்கள் மாற்றப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பயன்படுத்த முடியும் என்று உறுதி செய்யப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் பயன்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தபணியால் ஒரு சில பகுதிகளில் சிலிண்டர்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் சிலிண்டர் தட்டுப்பாடு எங்கும் இல்லை. நிலைமை சரியாகி விட்டது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்