முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-27 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ம் ஆண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான, பாதுகாப்பான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். குடிநீர் வினியோகத்தில் மக்கள் ஒவ்வொருவரின் பங்கினை உருவாக்கிடும் வகையில் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்ட பங்களிப்பு தொகையை பெற்று பொதுமக்களையும் திட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்தி இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக பங்களிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் பணி மதிப்பீட்டில் 5 சதவீத சமூக பங்களிப்பு தொகையும், இதர கிராமங்களில் 10 சதவீத சமூக பங்களிப்பு தொகையும் வசூல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் 84 ஊராட்சிகளில் மொத்தம் 36,234 வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.30.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஊரகப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 35,458 முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திடவும், அதற்கான வைப்பு தொகையை வசூல் செய்திடவும், முறைப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான ஆதார் விவரங்களை இணையதளத்தில் நாளைக்குள் (சனிக்கிழமை) உள்ளீடு செய்ய வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்பை முறைப்படுத்த முன்வர தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்