பாப்பாரப்பட்டி அருகேஅரசு பள்ளி தண்ணீர் தொட்டியில்மனித கழிவு கலக்கப்பட்டதா?போலீசார் விசாரணை

Update: 2023-09-22 19:30 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு நடுநிலைப்பள்ளி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 126 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று ஊராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது 2 தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் கழிவறை மேல் உள்ள தொட்டியில் ஏறி தண்ணீர் முழுவதும் நிரம்பி விட்டதா? என பார்த்தார். அப்போது தண்ணீர் கலங்கலாகவும், அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் பாபுவிடம் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி மற்றும் தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பாபு பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஷமிகள் யாரேனும் மனிதகழிவை தண்ணீர் தொட்டியில் கலந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்