கிருஷ்ணாபுரம் அருகே6 வயது சிறுவனை கொன்று குடிநீர் தொட்டியில் வீச்சுபோலீசார் விசாரணை

Update: 2023-07-18 19:30 GMT

தர்மபுரி:

கிருஷ்ணாபுரம் அருகே 6 வயது சிறுவனை கொன்று உடலை குடிநீர் தொட்டியில் வீசிய மா்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவன் மாயம்

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றான். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

குடிநீர் தொட்டியில் உடல்

இந்த நிலையில் அந்த பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது.

மேலும் சிறுவனை மர்மநபர்கள் கொலை செய்து உடலை மேல்நிலை குடிநீர் தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விளையாட சென்ற சிறுவன் கொலை செய்யப்பட்டு உடல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்