வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியவர்கள் தொழில் தொடங்க கடனுதவி மாவட்ட நிர்வாகம் தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியவர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-12 18:45 GMT

விருதுநகர்

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியவர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்

வெளிநாடுகளில் வேலை பார்த்தவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக வேலையிழந்து நாடு திரும்பியவர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பற்றி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோருக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிலிருந்து 1.1.2020 அல்லது அதற்கு பின்னர் நாடு திரும்பிய தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதி

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும் அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் வியாபாரம் மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவினர் 10 சதவீதமும் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும் மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை பாஸ்போர்ட், விசா நகல், கல்வித் தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிறப்பு அம்சம்

அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும் மானிய தொகை மூன்று ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, பின்னர் கடன் தொகையில் ஈடு செய்யப்படும் திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் ஆறு மாதங்கள் கழித்து முதல் தவணை தொகையினை வங்கியில் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். விருதுந்கர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பயன்பெற பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கலெக்டர் அலுவலக வளாகம் விருதுநகர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்