மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-20 10:59 GMT

புதுடெல்லி,

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர்.

இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கும், கவர்னர் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள டி.கே சிவக்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் தங்களது திறமையான நிர்வாகத்தின் மூலம் கர்நாடக மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.

தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த விடியல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூருவில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்